தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளில் 40 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிவதில்லை என்று தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மக்களுக்கான நுகர்வோர் நல அமைப்பின் ('சிட்டிஸன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப்') ஆய்வாளர் சுமனா நாராயணன், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வில், இருசக்கர வாகன ஓட்டிகளில் 40 சதவீதம் பேர் வரை தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதும், காரில் பயணிப்பவர்களில் பெரும்பாலோர் 'சீட் பெல்ட்' அணியாமல், விதிமுறைகளை மீறுபவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் இந்திய அளவில் அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 2015 -ஆம் ஆண்டு, தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 69,059 பேர் உயிரிழந்துள்ளனர். 79,346 பேர் காயமடைந்துள்ளனர்.
இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவதன் மூலம் 40 சதவீத உயிரிழப்பையும், 70 சதவீதம் காயம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியும். இதேபோல், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போர் ''சீட் பெல்ட்' அணிவதன் மூலம், முன் இருக்கையில் அமருபவர்களின் இறப்பை 50 சதவீதம் வரையும், பின் இருக்கையில் அமருபவர்களின் இறப்பு விகிதம் 75 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது.
சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: விபத்துக்களைக் குறைக்க மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். சாலை விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் இதனை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம். எங்களது ஆய்வறிக்கையை காவல் துறைக்கும் அனுப்பியுள்ளோம்.