சென்னை: மேற்கு கடற்கரைப் பகுதியில் பெய்து வந்த பருவ மழை பலவீனமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெப்பச் சலனம் சூடுபிடித்து, இந்த மாத இறுதியில் மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, மேற்குக் கடற்கரையில் தீவிரமாக இருந்த மழை தற்போது பலவீனமடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கான வாய்ப்பு படிப்படியாக அதிகரித்து, இந்த மாத இறுதியில் சிறப்பானதொரு மழை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் உள் மற்றும் கடற்கரையோர பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உண்டு. இந்த வார இறுதியில் பருவ மழை காரணமாக உள் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உண்டு. கடந்த ஜூலை 11ம் தேதியைப் போன்று குறைந்தது ஒரு நாளாவது நல்ல மழையைப் பெறுவோம்.
இரண்டு கடற் திசைகளிலும் மழை பெய்வது என்பது மிகவும் அரிதானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு வேளை மேற்கு கடற்கரைப் பகுதியில் மழை தீவிரம் அடைந்தால், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பலவீனமடையும்.
அடுத்த 15 நாட்களில், மலைத்தொடர் பகுதிகளில் மழை குறையும். இது நமக்கான வாய்ப்பு, அதாவது கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு.
இந்த மாதம் சிறப்பானதொரு மழையுடன் நிறைவு பெறும் என்று நம்புவோம். அதே சமயம், அதிக வெப்பமான நாட்களும் வருகின்றன. அதாவது வெப்பம் இல்லையென்றால் மழை இல்லை, எனவே மழை வேண்டுமென்றால் வெயிலையும், வெப்பத்தையும் தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.