அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரம் ஒருமுறையேனும் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட வேண்டும் என்று சென்னை
அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரம் ஒருமுறையேனும் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 'வந்தே மாதரம்' பாடல் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேவேளையில் வந்தே மாதரம் பாட விரும்பாதவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில், 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு, கே.வீரமணி என்பவர் வங்க மொழி என பதில் அளித்திருந்தார். ஆனால், 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலாக சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது என்று 'கீ ஆன்ஸரில்' தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, வீரமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வந்தே மாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, 'வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதப் பாடல்'' என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ''வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. பாடப் புத்தகத்தில் இருப்பதைத்தான் படித்து பதில் எழுத முடியும். வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் குறித்து இன்றைய தலைமுறைக்கு போதிய தெளிவு இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரம் ஒருமுறையேனும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். அதேவேளையில், வந்தே மாதரம் பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது.
இதேபோல் அரசு, தனியார் நிறுவனங்களில் யாரையும் கட்டாயப்படுத்தாமல் மாதம் ஒருமுறை வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். மேலும் இதுதொடர்பான சுற்றறிக்கையை தலைமைச் செயலாளர், 4 வாரத்துக்குள் அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
வந்தே மாதரம் பாடல் வங்கமொழியில் பாடப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
மேலும், இந்த ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டாலும், 0.17 மதிப்பெண் அவருக்கு குறைவாக இருப்பதாகவும், அதனால் ஆசிரியர் பதவி வழங்கப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்க முடியாது. அந்த 0.17 மதிப்பெண்ணை மனுதாரருக்கு வழங்கி, அவர் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவராக அறிவிக்க வேண்டும். அதன்பின்னர், 4 வாரத்துக்குள் மனுதாரருக்கு ஆசிரியர் பணியை தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி எம்.வி. முரளிதரன் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com