ஹட்சன் மற்றும் விஜய் பால் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தங்களது விற்பனையாளர்களிடமிருந்து, அதிகாரிகள் சட்ட விரோதமாக பால் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவதாகக் கூறி ஹட்சன் மற்றும் விஜய் பால் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுக்களில் பால் பரிசோதனையை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மட்டுமே நடத்த முடியும். மாநில அரசு பரிசோதனை செய்ய முடியாது. எனவே தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல்,விற்பனை மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி போன்ற தங்கள் தொழில் நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். அதே போல பால் மாதிரிகளை எடுத்து சோதிக்கவும் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இம்மனு நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், தங்கள் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ள ஆவின் நிறுவன ஆணையருக்கு, தங்களது பால் பொருட்களை ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. ஆனால் சட்டவிரோதமாக அவர் தங்களது நிறுவன பால் மாதிரிகளை ஆய்வு செய்கிறார். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் எந்த புகாரும் கூறவில்லை. ஆனால் ஆவின் பாலை அதிக அளவில் சந்தைப்படுத்தவே இதுபோன்ற கலப்படக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்று கூறினர்.
பால்வளத்துறை அமைச்சரே குற்றம் சாட்டிய நிலையில் மாநில அரசின் ஆய்வு உண்மையை வெளிப்படுத்தாது. எனவே பால் மாதிரிகளை ஆய்வு செய்ய நடுநிலையான குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரினர். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சந்தைகளுக்கு வரும் பாலை ஆய்வு செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் வாதிட்டார்.
இதனையடுத்து, நீதிபதி துரைசாமி, மனுதாக்கல் செய்த இரண்டு நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்கள் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் 4 வாரத்தில் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.