பள்ளி, கல்லூரிகளில் 'வந்தே மாதரம்' பாடல் பாட வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு தமிழக பாஜக வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் விடுதலைக்காகப் பல தலைவர்கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளனர். அவர்களது தியாகம் இளைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும். அது அவர்களுக்கு தேச பக்தியையும், நாட்டின் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நல்ல எண்ணத்தையும் வளர்க்க உதவும்.
'வந்தே மாதரம்' பாடலை தமிழ்மொழியில் மொழியாக்கம் செய்து பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வாரம் ஒருமுறை கட்டாயமாக பாட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறோம். இந்த உத்தரவை உடனடியாக தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.