தமிழகத்தில் புதன்கிழமை நிலவரப்படி, 10 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 108 டிகிரி வெயில் பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வானில் மேகங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. பகல் நேரங்களில், கடற்காற்று வரத் தாமதமாவதால் பல இடங்களில், வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதேவேளையில், வெப்பச் சலனத்தின் காரணமாக , அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையைப் பொருத்தவரை இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி அதிகரித்துக் காணப்படும் என்றனர்.
மழை: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 10 மி.மீ.,மழை பதிவானது. நாகப்பட்டினம், திருத்தணி, வால்பாறை மற்றும் வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்தது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
மதுரை 108
திருச்சி 105
அதிராம்பட்டினம், வேலூர் 103
திருத்தணி, கரூர் பரமத்தி 102
நாகப்பட்டினம் 101
சென்னை (மீனம்பாக்கம்),
சேலம் 100