சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை, முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
திருவொற்றியூரில் இருந்து மணலியை இணைக்கும் வகையில் திருவொற்றியும் ரயில் நிலையம் அருகே மாட்டுமந்தை என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்து உரையாற்றினார்.
500 மீட்டர் நீளமும் 13.5 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். ரயில்வே மேம்பாலத்தில் நின்றிருந்த மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் 61 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. மேம்பாலம் கட்டுமானப் பணியை துரிதப்படுத்தியதால் 6 ஆண்டுகளில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.