பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மு. சுப்புராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம் நக்ஸலைட் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கதிர்வேல் ஆகியோர் உடல்நலக் குறைவால் ஜூலை 8}ஆம் தேதி காலமாகினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஜெ. விஜயகாந்தி, மதுரை மாநகர ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் ஞ. அருண்குமார் நேரு ஆகியோர் உடல் நலக் குறைவால் ஜூலை 9}ஆம் தேதி காலமாகினர்.
சென்னை மாவட்டம் வேளச்சேரி எல்.பி சாலை கெனால் சாலை சந்திப்பில் மின் இணைப்பினை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் வடக்கு புதூர் கிராமத்தில் மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மருதையா என்பவரின் மகன் செந்தூர்பாண்டி என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மகன் பன்னீர்செல்வம் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து ஜூலை 7}ஆம் தேதி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் சின்னக்குக்குண்டி கிராமத்தைச் சேர்ந்த முருககவுண்டர் என்பவரின் மகன் கோதண்டன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்கள் மற்றும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.