சென்னை: தமிழகத்தை தாங்கள் ஆட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்படுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதியின் பவழ விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று சென்னை வந்திருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியா என்பது வெவேறு விதமான கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள ஒரு நாடு.அதுவே அதன் சிறப்பும் கூட. ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவும், அதனை இயக்கும் சக்தியாக இருக்கும் ஆர்எஸ்எஸ்ஸும் சேர்ந்து, இந்தியாவை ஒரு ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
எனவே இவை இரண்டுக்கும் எதிராக ஒரு ஒன்றுபட்ட யுத்தத்தை தொடங்க எதிர்கட்சியினர் ஆயத்தமாகி விட்டனர். அதன் ஒரு அடையாளம் தான் நேற்றைய கூட்டம். அத்தனை எதிர் கட்சிகளும் ஒரு மேடையில் அமர்ந்தோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தில் தாங்கள் தான் ஆட்சி நடத்துவது போல் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இந்த நிலை இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் தங்களை தவிர வேறு கட்சிகளே இருக்கக் கூடாது என்ற மனப்பான்மையில் செயல்படுகிறார்கள்.
அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற அனைத்து எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.