சென்னை: சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவைச் சந்திப்பதற்காக, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்ற பின்னர் கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக அதிமுக அம்மா அணி மூத்த அமைச்சர்கள் அறிவித்தது. ஓபிஎஸ் அணியுடன் இணைப்புக்கு 7 பேர் கொண்ட குழு அமைத்தது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்களை அகற்றியது என பல்வேறு அரசியல் அதிரடி நிகழ்வுகள் நடந்தேறின. இருந்தன.
இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தில்லி திகார் சிறையில் சுமார் 37 நாட்களாக டி.டி.வி.தினகரன் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்த தினகரன், மீண்டும் கட்சிப் பணியாற்றப் போவதாகவும் சசிகலாவைச் சந்திக்க உள்ளதாகவும், என்னை யாரும் நீக்கவில்லை. என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே இருக்கிறது என்றார்.
இந்நிலையில், சசிகலாவை சந்திப்பதற்காக தற்போது பெங்களூரு புறப்பட்டுள்ளார். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டவர், விமானம்மூலம் பெங்களூரு செல்கிறார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை இன்று மதியம் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரனின் சந்திப்புக்கு பிறகு அதிமுகவில் சில அதிரடி முடிவுகள் வெளியாகலாம் எனவும் கட்சியில் சசிகலா குடும்ப ஆதிக்கம் மீண்டும் தலைதூக்குமா? இரு அணிகள் இணைப்பு கிடப்பில் போடப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.