புதுச்சேரி: நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இதனால் முதல்வர் - ஆளுநருக்கிடையே ஆன மோதல் மேலும் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கிரண்பேடி, நாராயணசாமிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? மக்கள் நீதி வேண்டி கண்ணீர் வடிப்பதால் நிர்வாகியாக உதவ வேண்டியது அவசியமானது என்றும் யூனியன் பிரதேசத்தில் முதல்வரும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.
மேலும், தாம் செயல்படுவதை யார் தவறு என கூறுகின்றனர் என்றும் ஆவேச கேள்விகளை கிரண்பேடி எழுப்பியுள்ளார்.