சென்னை: இன்று காலை சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில், தமிழக அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனை செய்த நிலையில், தற்பொழுது 19 தமிழக அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெரும் முயற்சியில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், நேற்று முன்தினம் தில்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியானர்.
இன்று அவர் பெங்களூரு சிறையில் உள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்றுள்ளார்.மேலும் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டனர்
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜலக்ஷ்மி, வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜு, மணிகண்டன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், சரோஜா, சம்பத். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றனர்.
பின்னர் இவர்களுடன் சுகாதாரத்துறை அமைசச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு, தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த 19 அமைச்சர்ககளும் சந்தித்து பேசி வருகின்றனர்
பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தற்சமயம் சந்தித்து பேசிவரும் நிலையில், இந்த ஆலோசனைகள் மிகுந்த அரசியல் முக்கியதத்துவம் பெறுகின்றன.