வரம்பு மீறி ஆளுநர் செயல்பட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: முதல்வர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை

துணைநிலை ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்பட்டால் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என முதல்வர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
vnarayanasamy
vnarayanasamy

துணைநிலை ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்பட்டால் அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என முதல்வர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் நடந்த விவாதம் விவரம்:
சிவா (திமுக): எம்எல்ஏக்களை சங்கடப்படுத்தும் விதத்தில் ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார். வெளியில் தவறான எண்ணம் உருவாக்கப்படுகிறது. அவமானப்படுத்தும் நோக்கில் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். முதல்வர் செய்ய வேண்டும். மக்களால் தேர்வான பிரதிநிதிகளை மதிக்காமல் செயல்படுகிறார்கள். சபாநாயகர், முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு கொறடா அனந்தராமன்: ஆளுநர் சமூகவலைதளத்தில் 25-க்கு மேல்  கேள்விகள் எழுப்பி உள்ளார்..  இடைவெளி இருந்தால் நேரில் பேசியோ, கடிதம் மூலமோ தெரிவிக்கலாம். எந்த பொறுப்பும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் கேள்வி விடுப்பதும் எம்.எல்.ஏ.க்கள் மீது தவறான தகவல் பதிவு செய்வதும் தான்தோன்றிதனம். அவையில் முடிவு எடுங்கள். ஆளுநரை விமர்சிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறீர்கள். மக்கள் போராட்டத்தை கட்டவிழ்த்து விடுவோம். அரசுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக வேறு எண்ணத்தோடு கருத்துகளை மறைமுகமாக திணிப்பதுபோல் உள்ளது. மக்கள் மீது அக்கறையில்லை என மாயை உருவாக்குகிறார். ஆளுநர் முயற்சி செய்கிறார். ஆளுநர் விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்காவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும். 

அமைச்சர் கந்தசாமி: இதுதொடர்பாக  தொடர்ந்து பேசி வருகிறோம். முதல்வர் போராடக்கூடாது என்கிறார். எத்தனை பிரச்னைகளை ஆளுநர் தீர்த்து வைத்தார். எவ்வளவு நிதி பெற்றுத் தந்தார். அவரது செயல்பாட்டுக்கு துறைமுக விவகாரம் போதும். பிரதமர், குடியரசுத்தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். மக்கள் போராட்டம் தொடங்கினால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும். அதை விரும்புகிறார்.

முதல்வர் நாராயணசாமி: ஓராண்டு காலம், அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநர் செயல்பாடு பற்றி சொன்னபோது கூட விதிமுறை கடைபிடித்து செயல்பட அறிவுறுத்தி வந்தேன். தொடர்ந்து உள்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன். ஆளுநர் அதிகாரம் என்ன- அமைச்சர் அதிகாரம் என்ன என்பதை அவர்களுக்கு சட்டப்பூர்வமாக தந்துள்ளேன். உள்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது. 

எந்த மாநிலத்துக்கும் தனியாக சட்டம் இல்லை. யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியில் நிலம், நிதி, சட்டம் ஒழுங்கு மாநில அரசுக்கு அதிகாரமுள்ளது. தில்லிக்கே கிடையாது. ஆளுநரிடம் சென்று விளக்கமாக தெரிவித்தேன். 

அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும். துணைநிலை ஆளுநர் ஆலோசனை கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக உள்துறைக்கு தெரிவித்துள்ளோம்.  தனிப்பட்ட அதிகாரம் ஆளுநருக்கு புதுச்சேரியில் இல்லை. அமைச்சரவை முடிவு செய்வதை ஒப்புதல் தரவேண்டும். சிக்கலான பிரச்சினையில் கருத்து வேறுபாடு இருந்தால் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார். அனைத்து கோப்புகளையும் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.

ஆளுநர் ரகசிய காப்பை மீறி கட்டுரை பதிவு, கட்செவி அஞ்சல் போன்ற சமூக வலை தளங்களில் செய்யக்கூடாது. அவர் கட்டுமீறி செயல்படுவதால் பேசுகிறேன்.

கூட்டுறவுக்கடன் ரத்து செய்ய முடிவு எடுத்தோம். இதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது.  ஆனால், கூட்டுறவு கடன் ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்றார். உண்டு என்றேன். அதைத்தொடர்ந்து  வங்கி கடனை ரத்து செய்ய சொன்னார். அதற்கு மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன். 

தமிழகம், கர்நாடகம், உ.பி உட்பட கடன்களை ரத்து செய்துள்ளனர். வறட்சி நிவாரணம் மாநில அரசே முதலில் தரலாம் என்று மத்திய அரசு அனுமதியுள்ளது. ஓராண்டாக இது நடக்கிறது. 

விவசாயிகள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். கோப்புகளை திருப்பி அனுப்பினால் அவரிடம் எவ்வாறு இருக்கும். மேலும், விவசாய கடனை ரத்து செய்ய அதிகாரமுள்ளது என்று சட்டத்துறை தெரிவித்தது. 

மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றும் வேலையில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.  நாங்கள் கொடுக்க விரும்புகிறோம் அதை தடுக்க நீங்கள்யார் என்று கேள்வியுடன் அனுப்பியுள்ளேன்.

தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு தொடர்பாக தடுத்ததால் உடன் தர முடியவில்லை.

தலித் மக்களுக்கு இலவச கல்வி திட்டம் நிறைவேற்றினோம். ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். சிறப்பு கூறு நிதியை உரிய மக்களுக்கு தர அதிகாரமுள்ளது. அதற்கான கோப்பை டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இது சேவையா? விளம்பரம் செய்யவே விரும்புகிறார். சமுகவலைதளங்கள் மூலம் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதுதான் ஆளுநருக்கு வேலை.

ஆளுநர் பொறுப்புடன் நடக்க வேண்டும். பணம் மரத்தில் காய்கிறதா என்று தரம் தாழ்ந்து ஆளுநர் என்பதை மறந்து பேசுகிறார். அதிகாரிகளை அழைத்து மக்கள் மத்தியில் திட்டுவது- அசிங்கப்படுத்துவது தரம் தாழ்ந்த வேலையில் இறங்கியுள்ளார். 

வீட்டு வேலை செய்ய அழைப்பது போல் அமைச்சரை  அழைக்க ஆளுநர் கூறுகிறார்.  அமைச்சரை பேர் சொல்லி ஆளுநர் அழைக்கிறார். அவர் எல்லைக்குள் செயல்பட வேண்டும். 

அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை  அயோக்கியன் லஞ்சம் வாங்குவதாக பேசுகிறார். 

மருத்துவக்கல்லூரி இடங்களை தனியாருக்கு தாரைவார்த்து தரப்பட்டதாக சொன்னார்கள். அதிகாரிகளை குறை சொல்ல கூடாது  வீட்டில் வேலைக்காரர் போல் நடத்துகிறார்.

மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளது. உங்களுக்கு என்ன அதிகாரமுள்ளது. கோப்பைதான் நிறுத்துவீர்கள். ஓராணடாக வாய் திறக்காமல் இருந்தேன். 

பசுமை தீர்ப்பாயத்தில்  குப்பை பிரச்சினை தொடர்பாக வழக்கு உள்ளது. புதுச்சேரி அரசுக்கு தண்டனை தர கடிதம் நீதிபதிக்கு எழுதுகிறார். பதவிக்கு தகுதி இல்லாத நிலையில் இருக்கிறார். 

தேர்தல் ஆணையத்தில் புகார் சென்றது. நெல்லித்தோப்பு தேர்தல் நடக்கும்போது அதிகாரிகளை அழைத்து பேசுவதாக புகார்கள் வந்தது. தேர்தல் விதிமுறைகள் இருப்பதால் அதிகாரிகளை அழைத்து பேசாதீர்கள். ஆதாரத்துடன் புகார் தரப்பட்டது. தேர்தல் ஆணையம் கண்டித்தது. 

எந்த அதிகாரிகளும் அமைச்சர் உத்தரவு இல்லாமல் ஆளுநரை பார்க்கக்கூடாது. எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் வந்தால் மறியல் செய்ய வேண்டும். 24 மணிநேரமும் வேலை செய்வது எம்எல்ஏக்கள்தான்.

அதேபோல் அதிகாரிகளும், அமைச்சர்கள் லஞ்சம் வாங்கியதாக ஆளுநர் கூறியதை அவரால் நிருபிக்க முடியுமா?
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக விமான இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இதை செயல்படுத்த முயற்சி எடுத்தோம்.  ஜூலை 1-ல் தொடங்க வேண்டும். ஆனால் அக்கோப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

நிகர்நிலைப்பல்கலைக்கழகம் இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்குவதாக ஆளுநர் கூறினார். அவரால் வாங்கி தர முடிந்ததா என்பது கேள்விக்குறிதான். இவ்விஷயத்தில் அதிகாரம் இல்லை என்று சட்டத்துறை தெரிவித்துள்ளது. 

முதல்வர், அமைச்சரை அழைத்து பேசாமல் செயல்படுகிறார்கள். நிதியை திட்டமிட்ட செலவுகள்தான் செய்துள்ளோம். 94 சத நிதியை செலவு செய்தோம். அதிகார எல்லைக்குள் செயல்படவேண்டும். அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். 

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சட்டப்பேரவை கூடும்போதுதலையிட ஜனாதிபதிக்கே அதிகாரம் இல்லாத போது அவரது ஏஜென்டுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

ஆளுநர் புதுச்சேரி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார். கோப்பு அனுப்பினால் ஒப்புதல் அனுப்பாதது  நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்வதற்காகதான். எல்லைக்குள் வரம்புக்குள் நடக்க வேண்டும். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டரில் உத்தரவுகளை அனுப்பக்கூடாது. ஆளுநர் தனது எல்லைக்குள் செயல்படவேண்டும். கோப்புகளை  திருப்பி அனுப்புவதை வைத்து கொள்ள கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com