மதுராந்தகம்: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இன்னும் ஓராண்டுக்கு கூட நீடிக்காது என்றும் அழுத்தம் தாங்காமல் தானாவே கவிந்துவிடும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மைத்ரேயன் பேசுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வருதற்கான சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. இரண்டுமே தேடக்கூடிய நிலையில்தான் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலைதான் தற்போது நிலவி வருகிறது என்றார்.
மேலும், ஜெயலலிதா இருந்தபோது ராணுவக் கட்டுப்பாட்டுடன் அனைவரும் செயல்பட்டனர். ஆனால், தற்போது அனைவரும் தனது இஷ்டம்போல் செயல்படுகின்றனர்.
சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அழுத்தம் தாங்காமல் தானாகவே கவிழும் என்றார் மைத்ரேயன்.
டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியதாக வாய்வழியாக கூறுவது நம்பக்கூடியதல்ல. சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.