கோவை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளைச் சம்பவத்தின் முக்கிய எதிரி சயன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். சயனிடம் கொடநாடு எஸ்டேட்டில் விசாரணை நடத்தப்பட்டநிலையில், மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் முக்கிய எதிரியான சயனை கோவை மருத்துவமனையில் இருந்து நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் கொடநாட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் கோவை சிறையிலும், 2 பேர் கேரள சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய எதிரியான கனகராஜ் சேலத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார். அவருடைய நண்பர் சயன், பாலக்காடு அருகே விபத்தில் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கோவை மருத்துவமனையிலிருந்து நீலகிரி தனிப்படை போலீஸார் சயனை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நேரடியாக கொடநாட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
2 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது எவ்வாறு என்பது குறித்து போலீஸாரிடம் சயன் நடித்துக் காட்டினார். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் சயனை கொடநாட்டில் இருந்து கோத்தகிரி காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அங்கு மாலை வரை நடைபெற்ற விசாரணைக்குப் பின் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயனை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சயனுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டதால், நள்ளிரவு மீண்டும் கோவையில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.