தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் பரவியுள்ளது. மாநிலத்தின் அநேக இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில், 110 மி.மீ. மழை பெய்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக மேலும் இரண்டு நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை மிதமான மழை பெய்யும்.