மதுரை: மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வு முடிந்தவுடனேயே 'நீட்' தேர்வு நடத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் நீட் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து கொள்ள வேண்டுமென்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் வருமாறு:
தமிழகத்தில் மாணவர்களுக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிந்தவுடனேயே 'நீட்' தேர்வு நடத்தாமல், மூன்று மாதங்கள் தாமதமாக நடத்துவது ஏன்? மாணவர்களுக்கு நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் இல்லாத நிலையில், எவ்வாறு ஒரு பொதுத்தேர்வு நடத்த இயலும்? தற்பொழுது நடத்தப்பட்டுள்ள நீட் தேர்வில் சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் அதிக அளவில் கேள்விகள் இடம்பெற்றுள்ளது ஏன்?
இவ்வாறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வழக்கினை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்தனர்.