சென்னை: விடியோ விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகு, மதுரை எம்எல்ஏ சரவணன் பேசியதாக தனியார் செய்தித் தொலைக்காட்சியில் வெளியான விடியோ விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துள்ளார். ஏற்கனவே இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதனை பேரவையில் விவாதிக்க முடியாது என்றும், அவ்வாறு விவாதித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்றும் கூறினார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாலும், சம்பந்தப்பட்ட உறுப்பினரே, அந்த விடியோவை மறுத்துவிட்டதாலும் இது குறித்து விவாதிக்க முடியாது. வேறு எந்த பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தாலும் விவாதிக்கத் தயார் என்றும் சபாநாயகர் தனபால் கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்க திமுகவினர் மறுத்து பேரவையில் கோஷம் எழுப்பினர். திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.