அரசு வழக்குரைஞர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் 132 அரசு வழக்குரைஞர்கள் பதவிகள் உள்ளன. ஆனால், இவற்றில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மூன்று பேருக்கு மட்டுமே அரசு வழக்குரைஞர் பதவி வழங்கப்பட்டுள்ளன.
எனவே, கடந்த ஏப்ரலில் வெளியிட்ட அரசு வழக்குரைஞர்கள் நியமன விதிகளை ரத்து செய்வதோடு, எஸ்.சி., எஸ்.டி.க்கு உரிய பிரதிநிதித்துவம், வெளிப்படைத் தன்மை இருக்கும் வகையில் புதிய விதிகளைக் கொண்டு வர வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.