சென்னை: கிராமப்புற மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவ சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான அரசானையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் கிராமப்புறங்களில் பணியாற்றும் மாணவர்களுக்கு, முதுநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக மாணவர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம் கிராமப்புற மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவ சேர்க்கையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான அரசானையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட அரசாணையை பின்பற்றி கடந்த மாதம் நடந்த எம்.டி மற்றும் எம்.எஸ் படிப்புக்கான மூன்று கலந்தாய்வு பட்டியல்களையும் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
மேலும் புதிய தரவரிசைப் பட்டியல் ஒன்றை மூன்று நாட்களுக்குள் தயாரித்து, அதன் அடிப்படையில் புதிதாக கலந்தாய்வு நடத்துமாறும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.