சென்னை: எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் எம்.எல்.ஏ சரவணன் பேசும் விடியோ ஒன்று ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததது அல்ல என்று அரசுத்தப்பு தெரிவித்தது.
அப்பொழுது இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, தமிழக சட்டப்பேரவை செயலர், சி.பி.ஐ, மற்றும் வருவாய் புலனய்வுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.