ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் கடமை தவறிவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த குற்றச்சாட்டில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் வழக்குரைஞர் ஒருவருவருக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் தெரிய வந்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தப் பிறகும் தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்யாத நிலையில், உடனடியாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, அந்த வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற தமிழக காவல் துறை தவறிவிட்டது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையமும் கடமை தவறிவிட்டது. வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது என்பதற்காக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைத்ததுடன் கடமை முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் ஒதுங்கியிருக்கக் கூடாது. பணம் கொடுத்த குற்றச்சாட்டில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்வதை ஆணையம் உறுதி செய்திருக்க வேண்டும்.
எனவே, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஆணையிட வேண்டும்.
மீனவர்களை விடுவிக்க வேண்டும்: ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களையும், அவர்களின் படகையும் இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது கண்டிக்கத்தக்கது. மீனவர்களையும், படகையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.