சென்னை: அமலாக்கத்துறையினர் தொடர்ந்துள்ள அந்நிய செலவாணி மோசடி வழக்கில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சுதாகரன் ஆஜர்படுத்தப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளி வி.என்.சுதாகரன். அவர் தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சூப்பர் டூப்பர் டிவி என்னும் நிறுவனத்திற்காக வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில், அந்நிய செலவாணி மோசடி நடந்ததாக, 1996-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அவரது உறவினரான பாஸ்கரன் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாவார். இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சுதாகரன் சிறையில் இருக்கும் பொழுதே, இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அப்பொழுது கர்நாடக சட்டமன்ற கூட்டத்த தொடர் நடைபெற்று வந்த காரணத்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஜர் படுத்த இயலாது என்று கர்நாடக காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்பொழுது இந்த வழக்கு விசாரணைக்காக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சுதாகரன் ஆஜர்படுத்தப்பட்டார்.ஏற்கனவே பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டதால், இன்று சுதாகரன் மீது குற்றசாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
சுதாகரன் ஆஜராவதை அடுத்தது நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.