இலங்கைச் சிறையிலுள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு கடிதம்

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைச் சிறையிலுள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு கடிதம்

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமருக்கு அவர் திங்கள்கிழமை எழுதிய கடித விவரம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது குறித்தும் அவர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையை இலங்கை அரசு கேலிக்கூத்து ஆக்குவது பற்றியும் தெரிவிக்க இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி தளத்தில் இருந்து 5 மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி ஓர் இயந்திரப் படகு மூலம் மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் தங்களின் பாரம்பரியப் பகுதியான பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 18-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கரைநகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக். நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும்போது, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதங்கள் வாயிலாக பலமுறை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதை அறியலாம்.
இப்படிப்பட்ட தொடர்ச்சியான கைது நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மேலும் தொடராவண்ணம் வலுவான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான பணியில் தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு உதவியுடன் பல நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்வது நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் மீன்பிடி படகுகளையும் உபகரணங்களையும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் திருப்பித் தர வேண்டும் ஆகிய விஷயங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நிர்வாகத்தில் தலையிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாகத்தான் மீனவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
எனவே, இதில் தாங்கள் தனிப்பட்ட முறையில் அவசரமாகச் செயல்பட்டு, இலங்கையின் உயர்நிலை அதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டும். கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமுள்ள 16 தமிழக மீனவர்களையும், அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ள 136 படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com