சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விடியோ விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் அளித்த குறுந்தகடு, மனு மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவற்றை பேரவைத் தலைவர் தனபால், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை திங்கள்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பிற தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநரை கடந்த சனிக்கிழமை சந்தித்து, பேரவை உறுப்பினர்கள் பண பேர விவகாரம் தொடர்பான குறுந்தகடு, மனுவை அளித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரினர்.
முதல்வர் பழனிசாமி அரசு மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், பண பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது, சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் மூன்று கோரிக்கைளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விடுத்திருந்தார். இந்த மூன்று கோரிக்கைகளையும் வலியுறுத்தி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே, ஸ்டாலின் அளித்த சி.டி., மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவர் தனபால், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு அவற்றை ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநரின் முதன்மைச் செயலர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.