திருச்சி: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் தொடர்புடைய ரெளடியை திருச்சி போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
திருச்சி, மருங்காபுரி பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அழகர் மகன் சுப்பிரமணியனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில், மேலவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முத்துவேல் மகன் தேவா (எ) வாசுதேவன் (29), சகாயராஜ் மகன் ராஜா (23), மகாலிங்கம் மகன் குமரவேல் (23) ஆகிய மூவரையும் உறையூர் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வாசுதேவன் மீது திருச்சி மாநகர், மாவட்டங்களில் அடிதடி, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், ஏற்கெனவே 2 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண், வாசுதேவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
இந்த ஆணையை திருச்சி போலீஸார், காரைக்கால் சிறையில் உள்ள வாசுதேவனிடம் அளித்தனர்.