சென்னை: பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.
பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு மே 1 முதல் 31 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு நடைபெற்று முடிந்தது.
இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழத்திற்கு அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கான 16 இலக்கம் கொண்ட ரேண்டம் எண்ணை இன்று செவ்வாய்கிழமை (ஜூன் 20) அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதற்காக அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரேண்டம் எண்ணை வெளியிட்டார் உயர் கல்வி துறை செயலர் சுனில் பாலிவல்.
ஒரே மாதிரியாக உள்ள, 'கட் ஆப்', பிறந்த தேதி கொண்ட மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.
விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அனைவரும் தங்களுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
வரும் 22 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.