மாட்டிறைச்சி விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்தை எதிர்த்து தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மாட்டிறைச்சி விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்தை எதிர்த்து தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு முதல்வர் உரிய பதில் அளிக்காத காரணத்தினால், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்கு தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபை தொடங்கிய நாளன்றே, நான் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தேன். அதனடிப்படையில் இன்று சட்டப்பேரவையில்  நான் எழுந்து, ”மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்துக்கு தடை கொண்டு வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”, என்று பிரச்னை எழுப்பினேன். பக்கத்தில் உள்ள புதுவை மாநிலத்தில் அந்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று ஏகமனதாகத் தீர்மானம் போடுகிறார்கள். அதேபோல, கேரள மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடுகிறார்கள். மேகாலயா மாநில சட்டப்பேரவையில் அதுபோல தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.
 
அதுமட்டுமல்ல, கோவா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான் நடைபெறுகிறது. பாஜகவை சேர்ந்தவர் தான் முதலமைச்சராகவும் இருக்கிறார். அந்த மாநிலத்தில் கூட, இந்தச் சட்டம் சரியான சட்டமல்ல, பல திருத்தங்களை கொண்டு வந்த பிறகுதான் இதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி அங்கேயும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
 
இந்தநிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதிமுகவின் தோழமைக் கட்சிகளாக உள்ள ஓரிரு கட்சிகளும் இதை எதிர்த்துப் பேசி, அதன் பிறகு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சொன்ன பிறகு, பதில் சொல்ல வேண்டிய முதல்வர் இதுபற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல், ஏதோ ஒரு அறிக்கையைப் படித்துவிட்டு அமர்ந்து விட்டார்.
 
எனவே, நான் எழுந்து, “சட்டப்பேரவையில் இதுகுறித்துத் தீர்மானம் போடுவதற்குக் கூட இந்த அரசு தயங்குகிறது, இந்தச் சட்டம் பற்றி மக்கள் மன்றத்திலும், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட நேரத்திலும், ”இதை இன்னும் படிக்கவில்லை, அதை முழுமையாக படித்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும்”, என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். சட்டப்பேரவையிலாவது அதுபற்றி எதிர்த்து ஏதாவது பேச முற்படுவாரா? அதை கண்டிக்கின்ற வகையில் ஒரு வார்த்தையாவது சொல்வாரா? என்று காத்திருந்தோம். ஆனால், சட்டப்பேரவையிலும் அதுபற்றி எதுவும் பேசாமல் அமர்ந்து விட்டார்.
 
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு நெருக்கடி நிலையை கொண்டு வந்தபோது, ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அதனை எதிர்த்து நின்றது. ஆனால், இன்றைக்கு உள்ள ஆட்சியானது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் காலில் விழுந்து கிடக்கின்ற, பஜனை பாடுகின்ற, லாலி பாடுகின்ற, பாஜக ஆட்சி எதைக் கொண்டு வந்தாலும் அதற்கு அப்படியே அடிபணிந்து, பாஜகவின் காலில் விழுந்து, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற ஒரு அரசாக இந்த அரசு இருந்து கொண்டுள்ளது என்பதற்கு, இன்றைக்கு சட்டப்பேரவையில் நடந்திருக்கின்ற நிகழ்ச்சி ஒரு சாட்சியாக, சான்றாக அமைந்துள்ளது.
 
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நேரத்தில் என்ன நடந்தது என்று அப்போதே மாநில ஆளுநரிடத்தில் எடுத்துரைத்து, மனுவும் கொடுத்திருக்கிறோம். ஆனால், அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, அது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று மீண்டும் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சென்று ஆளுநரிடம் மனு கொடுத்தோம். அது, தலைமைச் செயலாளருக்கும், சட்டப்பேரவை செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக இன்றைக்கு செய்தி கிடைத்து இருக்கிறது. இதுகுறித்து, ஆளுநர் மாளிகையில் இருந்தே செய்திக்குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
 
இப்போது நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சியானது மக்களுடைய ஆதரவுபெற்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியல்ல. குதிரை பேரத்தின் ஆதரவு பெற்று, குதிரை பேரத்தால் நடைபெற்று வரும் ஆட்சியாக உள்ளது.
 
வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இந்த ஆட்சி பயந்து, அஞ்சி நடுங்கி, மத்திய அரசின் காலில் விழுந்து இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com