ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியது தொடர்பான புகார் குறித்து ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து முதல்வர், டிடிவி தினகரன் மற்றும் நான்கு அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும், வழக்கு பதிவு செய்ய தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரி நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் எம்.பி. வைரகண்ணன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இந்தியத் தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில்(குற்றச்சாட்டு தொடர்பாக 34 பக்கங்கள் கொண்ட அறிக்கை) இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வழக்கு பதிவு (எப்ஃஐஆர்) செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த எப்ஃஐஆரில் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. மேலும் அடையாளம் தெரியாத நபர் எனக் கூறியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது, அவற்றில் ஏன் பெயர்களை நிரப்பவில்லை. எதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஏப்ரல் 18-ஆம் தேதியிட்ட புகார் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் (34 பக்கங்கள் கொண்ட அறிக்கை), (அபிராமபுரம்) காவல்துறை தரப்பில் வழக்கு டைரி உள்ளிட்ட ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.