புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக பறந்த விவகாரம் தொடர்பாக அவரது கார் ஓட்டுநர் இப்ராகிம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு சென்ற முதல்வர் நாராயணசாமியின் காரின் முன்பக்கத்தில் தேசிய கொடி தலைகீழாக பொருத்தப்பட்டிருந்தது. முதல்வரின் காரில் தேசியக் கொடி தலைகீழாக பறப்பதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கார் ஓட்டுநர் இப்ராகீம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை முதல்வரின் தனிச்செயலளர் ராஜமாணிக்கம் பிறப்பித்துள்ளார்.