தமிழகத்தில் 35 மருத்துவமனைகளில் இந்த ஆண்டு வாழ்வியல் சிகிச்சை மையங்களைத் தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் சர்வதேச யோகா தினம் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் அமைச்சர் பேசியது:
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு யோகா பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்டவற்றைக் குறைப்பதற்கும் உதவுகிறது. உரிய யோகா நிபுணர்கள் அல்லது பயிற்சியாளர்களிடம் கற்றுக் கொண்டு செய்வதால் அதனுடைய முழு பயனையும் அடைய முடியும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் 19 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் தொடங்கப்படுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு 23.53 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
பொது மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பையடுத்து, 31 தாலுகா மருத்துவமனைகளிலும், சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை, கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்பட 35 மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் சிகிச்சை மையங்களை இந்த ஆண்டில் தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மருத்துவக் கல்லூரிகளில் யோகா: யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மற்றும் செவிலிய மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் யோகா குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.