இலங்கைச் சிறையிலுள்ள 20 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறையிலுள்ள 20 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைச் சிறையிலுள்ள 20 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைச் சிறையிலுள்ள 20 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு வியாழக்கிழமை எழுதிய கடித விவரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வுகளையும், அது நிறுத்தப்படாமல் நீடிக்கும் மோசமான நிலையையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 பேர், 21-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அரசியல் சாசனத்துக்கு விரோதமாக கச்சத்தீவை இலங்கை அரசுக்கு ஒப்படைத்த பின்பு, பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக். நீரிணைப் பகுதியை இழந்ததுடன், மீன் பிடிக்கும் உரிமையும் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
கச்சைத்தீவை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா-இலங்கை இடையே 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. எனவே, இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை குறித்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணை அளவில் உள்ளது. கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறுவதால் மட்டுமே, எங்கள் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் உள்ள வாழ்வாதாரத்தை அமைதியாக அவர்கள் திரும்பப் பெற முடியும்.
தமிழக மீனவர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட படகுகளை நீண்ட காலம் பயன்படுத்தாமல் அப்படியே கடலில் விட்டிருப்பதால் அவை கடுமையான சேதம் அடைய அதிக வாய்ப்புள்ளது.
இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. அவை சேதமடைந்தால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவர்.
எனவே, பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீன்பிடி படகுகளையும், உபகரணங்களையும் புதுப்பித்து விடுவிக்கவும் அவற்றை எங்கள் மீனவர்களிடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.
படகுகளை விடுவித்தால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை அவர்களால் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே இந்தப் பிரச்னையை தாங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உடனே கொண்டு சென்று, அதை இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரியிடம் பேசி, 20 தமிழக மீனவர்களையும், 137 படகுகளையும் விடுவிக்க கேட்டுக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com