சென்னை: இன்று வெளியான 'நீட்' தேர்வு முடிவுகளில் தமிழகத்தினை சேர்ந்த மாணவர்கள் முதல் 25 இடங்களில் ஒன்றைக் கூட பிடிக்கவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட,மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) முடிவுகள் இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
முதலிடத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவ்தீப் சிங் பிடித்துள்ளார். அவர் 720-க்கு 697 மதிப்பெண் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்சித் குப்தா (695) பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷ் மூல்சந்தனி (695) பெற்றார்.
முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த பட்டியலில் பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத் மாநிலங்களில் தலா 3 மாணவர்களும், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் தலா ஒரு மாணவரும் இடம்பெற்றுள்ளனர்.இவர்களில் 11 பேர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழக மாணவர்கள் மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் 'நீட்' தேர்வை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்வது மிகக்கடினம் எனப் பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
அதற்கு ஏற்ற வகையில் பலரும் கருத்து கூறிவந்த நிலையில், இன்றைய தேர்வு முடிவுகளில் முதல் 25 பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.