ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியது தொடர்பான புகார் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை வழக்குரைஞர் எம்.பி. வைரகண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்கள், அபிராமபுரம் காவல் நிலையத் தரப்பில் வழக்கு டைரி ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன.
பெயர்கள் பதிவு செய்யப்படாதது ஏன்?: அப்போது அவற்றை பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணைய அறிக்கையில் மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டும், ஏன் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அந்தப் பெயர்கள் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம், மாநகரக் காவல் ஆணையர், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ஜூலை 14-ஆம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
கடந்த விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் (குற்றச்சாட்டு தொடர்பாக 34 பக்கங்கள் கொண்ட அறிக்கை) கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வழக்குப் பதிவு (முதல் தகவல் அறிக்கை) செய்யப்பட்டுள்ளது.
ஆனால், காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அடையாளம் தெரியாத நபர் எனக்கூறியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.