மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
மாற்றுத் திறனாளிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியது: சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் மாற்றுத் திறனாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை வரி விலக்குப் பெற்ற உபகரணங்கள் அனைத்தும் இப்போது 5 முதல் 18 சதவீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பார்வையற்றோர் பயன்படுத்தக்கூடிய பிரெய்லி கடிகாரங்கள், பிரெய்லி பேப்பர் மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
பிரெய்லி தட்டச்சு இயந்திரங்களுக்கு 18 சதவீத வரியும் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் மற்றும் அவர்களைக் கொண்டு செல்ல உதவும் மற்ற உபகரணங்களுக்கு 5 சதவீத வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படும் கார்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்ட நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாரா என அறிய விரும்புகிறேன். அப்படி வைக்காவிட்டால், உடனடியாக அந்தக் கோரிக்கையை எடுத்து வைக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்றார்.
வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குறுக்கிட்டுக் கூறியது:
ஜிஎஸ்டி எனும் சரக்கு சேவை வரி குறித்து தமிழகம் வைத்த 90 சதவீதக் கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டாலும் நமது கோரிக்கைகளை வலியுறுத்திப் பெறலாம். எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய பிரச்னை குறித்து, தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.