பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே சொத்து பிரச்னையில் தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு, விபத்தில் உயிரிழந்ததாக கூறிய மகள்கள், மருமகன், பேரன் ஆகிய 4 பேரை பாடாலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (எ) ராமசாமி (65). விவசாயி. இவர், கடந்த 20 ஆம் தேதி டி.களத்தூர் பிரிவு சாலை பகுதியில் இருந்து அடைக்கம்பட்டி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனராம். இதுகுறித்து, அவரது மகள் விஜயா பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ராமசாமியை அவரது உறவினர்களே அடித்து கொலை செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அவரது மகள் மாலதி (28), அவரது கணவர் சிவக்குமார் (37), மகள் விஜயா (30), மகள் மலரின் மகன் மணிகண்டன் (20) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ராமசாமி தன்னுடைய சொத்துகளை வேறொருவருக்கு எழுதி வைப்பதாக நீண்ட நாள்களாக மிரட்டி வந்ததால், 4 பேரும் சேர்ந்து வயலில் தூங்கிக் கொண்டிருந்த ராமசாமியை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸார் ராமசாமியை கொலை செய்த மகள்கள் உள்பட
4 பேரையும் கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர் சுஜாதா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, மேற்கண்ட 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார்.