கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணியில் திங்கள்கிழமை நடக்கவிருந்த சிறுமியின் திருமணத்தை பொன்னேரி வட்டாட்சியர் ஜெ.சுமதி ஞாயிற்றுக்கிழமை இரவு தடுத்து நிறுத்தினார்.
பெரியபாளையத்தை அடுத்த மாலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகள் ரேவதி (17). இவருக்கும், ஆரணியை அடுத்த சின்னம்பேடுபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்துக்கும் (27) திங்கள்கிழமை காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரணியில் உள்ள மண்டபம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு மணமக்கள் வரவேற்பு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலர் எம்.எஸ்.கலாவுக்கு புகார் அளிக்கப்பட்டது.
தகவலறிந்த பொன்னேரி வட்டாட்சியர் ஜெ.சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் வி.சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் புஷ்பலதா உள்ளிட்டோர் ஆரணி போலீஸாருடன் திருமண மண்டபத்துக்கு சென்றனர். தொடர்ந்து இரு வீட்டாரிடமும் பேசி, சட்டத்துக்கு புறம்பான இந்த திருமணத்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி தடுத்து நிறுத்தினர். பின்னர் இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கினர். இந்த சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.