நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக 3 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கே. பாலு தலைமையிலான போலீஸார் மேற்கொண்ட சோதனையில், கோடியக்காடு கிராமம் கடலோரப் பகுதியில், தனியாருக்கு சொந்தமான புகையிலை சாகுபடி வயலில் 3 மூட்டைகளில் மொத்தம் 55 கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, கோடியக்காடு கிராமம், ஆதிவாசிகள் காலனியைச் சேர்ந்த சி. வரதராஜன் (32), மா. சாமிநாதன் (55), வடக்குத் தெரு கு. ராஜகிளி (46) ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கஞ்சா மூட்டைகளை கோடியக்கரை கடல் வழியே இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிந்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.