சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணமுடிந்தது.
கர்நாடக மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சனிக்கிழமை வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள், ஏற்காட்டில் தொடர்ந்து மூன்று நாள்கள் தங்கி சுற்றுலாப் பகுதிகளை கண்டு மகிழ்ந்தனர். இதனால், ஏற்காட்டில் தங்கும் விடுதிகள் நிரம்பியிருந்தன.
சுற்றுலாப் பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், தாவரவியல் பூங்கா, சேர்வராயன் கோவில் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்வபோது மேக மூட்டமும், சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் பழ சீசன் வரத் தொடங்கியதையடுத்து பலாப்பழம், பேரிக்காய், அத்திப்பழம், மலைவாழைப் பழங்களை சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் சென்றனர்.