பட்டாசு மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக நீடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டாசுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 சதவீத வரி, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியில் 28 சதவீதமாக உயர உள்ளது. ஏற்கெனவே, சீனப் பட்டாசுகளின் வருகையால், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிவகாசிப் பட்டாசுகளின் அளவு குறைந்துள்ளது.
இந்த நேரத்தில், ஜிஎஸ்டி வரியை உயர்த்தி இருப்பது அவர்களுக்கு மேலும் வேதனையை உண்டாக்கியுள்ளது. ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சிவகாசியில் பட்டாசுத் தொழில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் காலவரையற்ற தொழில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
எனவே, 28 சதவீத வரியை முன்புபோல 12 சதவீதமாக குறைத்து பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிலையான நிம்மதியைத் தர வேண்டும்.