விவசாயிகள் நலனுக்கு எதிரான ஆந்திர அரசின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் தடுப்பணை கட்டுகிறது என்றவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார் என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: ஆந்திர மாநிலம், குப்பம் செல்லும் வழியில் கங்குத்தி அருகே பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுவதாக தகவல் வந்தவுடன் ஜூன் 14-இல் பொதுப் பணித் துறையின் அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த ஆற்றின் குறுக்கே மண் சாலை செல்லும் இடத்தில் தற்போது மேம்பாலம் அமைப்பதற்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கண்டறிந்தனர்.
மேலும், ஜூன் 15-இல் பொதுப் பணித் துறையின் உயரதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததில் அந்த இடத்தில் உயர் நிலை பாலம் கட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் கட்டுவதினால் ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
ஏற்கெனவே, பாலாற்றில் ஆந்திர மாநில அரசு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தது குறித்தும், புதியதாக கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பி, ஒரு சரியான பதில் கிடைக்கப் பெறாததால், தடுப்பணைகள் கட்டுமானப் பணியை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக ஆந்திர அரசால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலையும் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.