சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா ஓட்டிய கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா. கணவரைப் பிரிந்து வாழும் இவர், தனது தந்தையுடன் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். படப் பிடிப்புக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சௌந்தர்யா காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆழ்வார்பேட்டை முரேஸ் கேட் சாலை சந்திப்பில் திரும்பும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவருடய கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சௌந்தர்யா காரை சிறிது தூரத்தில் நிறுத்தினார்.
இந்த விபத்தில் ஆட்டோவின் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் மணி லேசான காயமடைந்தார். உடனே சௌந்தர்யா, விபத்து குறித்து நடிகர் தனுஷுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தனுஷ், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மணியை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் விபத்தில் சேதமடைந்த ஆட்டோவை பழுது நீக்க செலவாகும் முழு தொகையை தான் ஏற்பதாக நடிகர் தனுஷ் உறுதியளித்தாராம். அதனால் ஆட்டோ ஓட்டுநர் தரப்பினர் சமாதானமடைந்ததாகக் கூறப்படுகிறது.
காவல் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்யவில்லை. எனினும் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் விபத்து தொடர்பாக பதிவான காட்சியைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.