சென்னை: சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, அதுவும் கோடைக் காலம் தொடங்கும் நேரத்தில், டாஸ்மாக் கடைகளின் அலமாரிகளை கிங்ஃபிஷர் பீர் பாட்டில்கள் விரைவில் நிரப்ப உள்ளன.
குடிமகன்களுக்கு மிகவும் பிடித்த கிங்ஃபிஷர் உள்ளிட்ட சில மதுபான வகைகள் டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் வரவிருப்பதாக டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
மேலும், இந்த வார இறுதியில், டாஸ்மாக் கடைகளில் கிங்ஃபிஷர் மற்றும் இதர மதுபானங்கள் தமிழகத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த 3 மதுபான ஆலைகளுக்கும் டாஸ்மாக் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை, மதுபான உற்பத்திக்கான அனுமதியை அளித்தது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
வரி உள்ளிட்ட சில சொல்லப்படாத காரணங்களால், யுனைட்டட் ப்ரெவெரிஸ், எம்பீ ப்ரெவெரிஸ், என்ரிகா டிஸ்டில்லெரிஸ் நிறுவனங்களின் மதுபான வகைகளுக்கு டாஸ்டாக் நிறுவனம் திடீரென தடை விதித்தது.
இதனால் இந்நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து டாஸ்மாக் நிறுவன விற்பனை மேலாளர் கூறுகையில், மாநிலம் முழுவதும், மக்கள் அதிகம் விரும்பும் சில மதுபான வகைகள் விற்பனையில் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். அதே சமயம், மார்ச் முதல் மே, ஜூன் மாதங்களில் பியர் விற்பனை அதிகரிக்கும் காலத்தில் மீண்டும் கிங்பிஷர் பியர் வகைகள் விற்பனைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்று கூறியுள்ளார்.