சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சரத்தை மார்ச் 23 முதல் தொடங்குவேன் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் , அத்தொகுதி அதிமுக வேட்பாளருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிஇல்போட்டியிடும் தினகரன் இன்று மாலை அத்தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அருணாசல ஈஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின், அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் முன்னரே கூறியிருந்தபடி ஆர்.கே. நகர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்லபடுத்திய திட்டங்கள் அனைத்தையும் எனது தேர்தல் வாக்குறுதியாக அளித்து அவற்றை நிறைவேற்றுவேன்.
சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு ஆவணங்களை அளித்து வெற்றி பெறுவோம். ஆர்.கே.நகரில் எனது பிரச்சாரத்தை மார்ச் 23-ம்தேதி முதல் துவங்க உள்ளேன்.
இவ்வாறு தினகரன் கூறினார்.பேட்டியின் பொழுது அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் உடனிருந்தனர்.