புதுதில்லி: பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2096.80 கோடி தர மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வறட்சி நிலவரங்களை பார்வையிட கடந்த ஜனவரி மாதம் 22 முதல் 25 வரை நான்கு நாட்கள் மத்திய அரசினால் அமைக்கப்பட்ட குழுவானது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாய நிலங்களை பார்வையிட்டது.
பின்னர் புதுதில்லியில் மத்திய உள்துறை அமைசக்கத்திடம் அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.முன்னதாக தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடியை வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
ஆனால் தற்போது தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2096.80 கோடி தர மத்திய குழு பரிந்துரை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மத்திய உள்துறையின் துணைக்குழுவானது தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.1748.20 கோடி வழங்கவே பரிந்துரை செய்துள்ளது
இது குறித்து முழுமையாக ஆராய மத்திய உள்துறையின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை தில்லியில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.