சென்னை: தமிழகத்தின் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மீத்தேன் குறித்த ஆராய்ச்சிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. பின்னர் நடந்த ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கியது.
பின்னர் இந்த திட்டத்தின் அபாயம் குறித்து பொதுமக்கள் உணாந்து கொண்டு தொடர் போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா இதுகுறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அடிப்படையில் திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா 2015-ஆம் ஆண்டு நிரந்தரத் தடை விதித்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை நிபுணர் குழு ஒன்று தற்பொழுது இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்து புதிய அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது