இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி பொதுபார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. வேட்பாளர்களைக் கண்காணிக்க பல்வேறு கண்காணிப்புக் குழுக்களும், கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு அறையும் இயங்கி வருகிறது. இந்தத் தேர்தலைக் கண்காணிக்க பொது பார்வையாளராக பிரவீண் பிரகாஷ் (ஐ.ஏ.எஸ்), தேர்தல் செலவினப் பார்வையாளராக அபர்ணா வில்லூரி (ஐ.ஆர்.எஸ்),காவல் பார்வையாளராக ஷிவ்குமார் வர்மா (ஐ.பி.எஸ்) ஆகியோரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
பொது பார்வையாளரும், காவல் பார்வையாளரும் வியாழக்கிழமை (மார்ச் 23) பொறுப்பேற்றனர். செலவினப் பார்வையாளர் வரும் மார்ச் 27 அன்று பொறுப்பேற்பார். தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்கள் தெரிவிக்க: பொது பார்வையாளர் 94450 36578, செலவினப் பார்வையாளர் 94450 36584, காவல் பார்வையாளர் 94450 36579 என்ற எண்களிலும், பார்வையாளர் அதிகாரிகள் தங்கியுள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 25333093 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.