சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த கரன்சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமென்றால் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது.
இதையடுத்து திமுகவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், ஆணையர் ஜார்ஜை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. புதிய ஆணையர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.
கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலைத் தொடர்ந்து இடைத்தேர்தலிலும் ஜார்ஜ் மீது புகார் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த கரன்சின்ஹாவை, சென்னை மாநகர காவல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை ஆணையராக ஜார்ஜ் நியமனம் செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜார்ஜ், 1984-ஆம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். 1987-இல் ராமநாதபுரத்தில் காவல் அதிகாரியாக தனது பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.