சென்னை: தன் மேலுள்ள இரண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்க கோரிய டி.டி.வி தினகரனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுகவின் துணைபொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன். இவர் மீது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு வழக்குகளை 1994-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை தொடர்ந்தது. 2015-ஆம் ஆண்டு அவரை இந்த வழக்குகளில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த மேல் முறையீட்டில் தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் பொருளாதார விவகாரங்களுக்கான நீதிமன்றத்தில் தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடியும் வரை வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு கோரியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி மலர்வதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தினகரனின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
அவர் இந்த வழக்கு 20 வருடங்களுக்கு மேலாக நடந்து வருவதாகவும், தற்பொழுது தினசரி விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மலர்வதி டி.டி.வி தினகரனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.