திருவள்ளூர் அருகே சிறுவர்களுக்கென அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ளது திருமணம் ஊராட்சி. இங்குள்ள சிவன் கோயில் மற்றும் அரசுப் பள்ளி அருகே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம் அமைக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால், பள்ளி மாணவர்கள் இந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்ததால், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சிறுவர்களிடையே விளையாட்டு மோகம் குறைந்து, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி என மனம் மாறும் நிலை உள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து, விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.